Tuesday, September 19
Shadow

‘பரிவர்த்தனை’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Surjith, Swathi, Rajeshwari, Mohith, Smega, Bharathimohan, Divyasridhar, Rail Karthi

Directed By : S.ManiBharathi

Music By : Rishaanth Arwin

Produced By : Pori. SenthiVel

 

M S V புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பொறி. செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள படத்திற்கு ” பரிவர்த்தனை ” என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர். வெத்து வேட்டு, தி பெட் ஆகிய படங்களை தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
விஜய் டிவியில் நம்ம வீட்டு பொண்ணு தொடரின் நாயகன் சுர்ஜித் இந்த படத்தின் நாயகனாகவும், ஈரமான ரோஜாவே தொடரில் நாயகியாக நடித்து வரும் சுவாதி இந்த படத்தின் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

 

 

 

 

தந்தையின் வற்புறுத்தலால் நாயகி சுவாதியை திருமணம் செய்துக்கொள்ளும் நாயகன் சுர்ஜித், மனதளவில் அவரை மனைவியாக ஏற்றுக்கொள்ளாமல் அவருடன் வெறுப்பாக வாழ்ந்து வருகிறார். கணவனின் மனநிலை நிச்சயம் ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கையில் இருக்கும் சுவாதி, தனது கல்லூரி தோழியான ராஜேஸ்வரியை சந்திக்க அவரது ஊருக்கு செல்கிறார். அப்போது அவருடைய தோழி திருமணம் செய்து கொள்ளாமல், குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.திருமணத்தையே வெறுத்து வாழும் தோழியின் வாழ்க்கையை மாற்றும் முயற்சியில் ஈடுபடும் சுவாதிக்கு, தனது தோழி இப்படி ஒரு வாழ்க்கையை தேர்வு செய்ய தனது கணவன் தான் காரணம் என்ற உண்மை தெரிய வருகிறது. அதன் பிறகு அவர் என்ன செய்தார்? என்பதை சொல்வது தான் ‘பரிவர்த்தனை’.சின்னத்திரை நட்சத்திரங்களான சுர்ஜித், சுவாதி மற்றும் ராஜேஸ்வரி இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகியிருக்கிறார்கள். முதல் படத்திலேயே மூன்று பேரும் அழுத்தமான கதாபாத்திரத்தில் குறையில்லாமல் நடித்திருக்கிறார்க்கள்.

 

மோஹித், ஸ்மேகா, பாரதி மோகன், திவ்யா ஸ்ரீதர், ரயில் கார்த்தி என்று மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் தோற்றமும், அவர்கள் வெளிப்படுத்திய நடிப்பும் செயற்கைத் தனமாக இருக்கிறது.ஒளிப்பதிவாளர் கே.கோகுல் கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளர் ரிஷாந்த் அஸ்வினின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவு.திரைப்படத்தை தயாரித்திருக்கும் பொறி.செந்திவேல் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். கே.பாக்யராஜின் ‘அந்த 7 நாட்கள்’ படத்தின் மையக்கருவை உல்டாவாக மாற்றி, தற்போதை காலக்கட்டத்திற்கு ஏற்ப புரட்சிகரமான ஒரு கதையை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.பொறி.செந்திவேலின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் எஸ்.மணிபாரதி, சிறிய பட்ஜெட்டில் அழுத்தமான படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

 

காதல் தோல்வியால் திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வரும் பெண், தனது பெற்றோருக்காக குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது சரி, ஆனால் அதே குழந்தையை காதலன் கிடைத்த பிறகு பிரிவது சரியா?, பள்ளி பருவ காதலை மறக்க முடியாமல் தவிக்கும் காதலிக்கு காதலன் எங்கு இருக்கிறார் என்று தெரியாது, ஆனால் காதலி அதே ஊரில் தான் இருக்கிறார் என்பது காதலனுக்கு தெரியும் அல்லவா, அப்படி இருக்கும் போது, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்த பிறகாவது அவர் தனது காதலியை சந்திக்க சென்றிருக்கலாமே. இது எதையும் செய்யாத அவர் அப்பா சொல்லியதற்காக திருமணம் செய்துக்கொண்டு, வேண்டா வெறுப்பாக வாழ்வது எதற்காக. இப்படி ஏகப்பட்ட லாஜிக் மீறல்களோடு படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ்.மணிபாரதி, காட்சிகளை புதிதாக யோசிக்காமல் பழைய பாணியை கடைபிடித்திருக்கிறார்.

 

இயக்குநர் சொல்ல வரும் கருத்து தற்போதைய காலக்கட்டத்தில் நடக்க கூடியவை தான் என்றாலும் அதை சரியான திரைமொழியில் அவர் சொல்ல தவறியிருப்பதோடு, தற்போதைய காலக்கட்ட ரசிகர்களுக்கு ஏற்ற முறையில் காட்சிகளை வடிவமைத்து படத்தை கொடுக்கவும் தவறியிருக்கிறார்.